ஆசியாவின் பொக்கிஷம்
(யாழ்ப்பாண பொது நூலகம்)
பொசுங்கிய நாள் 31.05.1981 - 01.06.1981
நூலக வரலாறு,நூலக எரிப்பு சம்பந்தமாக அறிந்து கொள்ளலாம்
அண்ணளவாக ஒரு இலட்சம் (97000) நூல்களையும், பழைமை வாய்ந்த 1800 ஓலைச் சுவடிகளையும், சஞ்சிகைகளையும் ஒன்று சேர்த்து எரித்துச் சாம்பலாக்கிய கல்வியழிப்பு 1981 ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதியன்று அரங்கேற்றப்பட்டது.
20 ஆம் நூற்றாண்டின் , நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. இவ்வருடத்துடன் நூலக எரிப்பு 40 வருடங்களை தாண்டி நினைவாக உலா வருகின்றது எவ்வளவோ தமிழின வரலாறுகள் விசமிகளால் அழிக்கப்பட்டமை இன்றும் தமிழரின் நெஞ்சங்களில் மாற வடுவுடைய காயங்கள் தான்.
ஆசியாவிலே மிகப்பெரிய பொக்கிஷம் யாழ் நூலகம். உண்மையிலே எவ்வளவோ எட்டுச்சுவடிகளையும் கல்வியல் நூல்களையும் தாங்கி நின்ற தாய் அது. கல்வி விடயமாகட்டும், எழுத்துக்கலையின் அழகாய் கூறும் விடயமாகட்டும் எது என்றாலும் எமது பொது நூலகம் தலை நிமிர்ந்து நிற்கின்றது. யாழ்பாணம் கல்வி கலாச்சாரத்துக்கு முக்கியமான ஒரு நிலையம் என்றால் அது மிகையாகாது. அதைவிட கலாச்சாரம் இன்று கேள்விகுறியானாலும் சில பல இடங்களில் அது வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.இதற்கு யாழ் நூலகம் சிறந்த எடுத்துகாட்டாகும்.பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும், பொது மக்களினதும், பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினதும் தாராளமான ஆதரவினாலும் வளர்ச்சி பெற்றிருந்த எமது பண்பாடு, கலாச்சாரம் என்பவற்றிலும், கல்வியிலும் முக்கியம் வகிக்கும் யாழ் பொது நூலகம் தமிழ் வரலாற்று பொக்கிஷம் என்றால் அது மிகையாகாது.
நூலக வரலாறு
இந்த நிறுவனத்துக்கான உருவாக்கம், கருப்பொருள் க.மு. செல்லப்பா என்னும் ஆர்வலரொருவரால் உருவாக்கப்பட்டது. இந்த செல்லப்பா அச்சுவேலியை சேர்ந்தவர், யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் காரியதரிசியாக இருந்தவர். நவம்பர் 11. 1933 ஆம் ஆண்டில் தனது வீட்டில், சில நூல்களுடன் இவர் நடத்திவந்த நூல் நிலையமே இன்று விசாலமாக வளர்ந்துள்ளது. இதனைப் பலருக்கும் பயன்படும் வகையில் விரிவுபடுத்தும் நோக்கில், 1934ஆம் ஆண்டு ஆனி மாதம் 9ஆம் திகதி ஐசாக் தம்பையா அவர்களின் தலைமையில் யாழ்ப்பாண மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றே பொது நூலகத்தின் தோற்றத்திற்கு முக்கிய காரணமாகியது. இக்கூட்டக் காரியதரிசி திரு. க. மு. செல்லப்பா அவர்கள் சிரமப்பட்டுத் திரட்டிய 184 ரூபா 22சதம் தான் முன்னோடியான பொது நூலகம் ஒன்றிற்கான மூலதனமாய் அமைந்தது. அன்றைய காலத்தில் அது ஒரு பெரிய மூலதனம் தான்.
இதன் வழி ஆஸ்பத்திரி (வைத்தியசாலை) வீதியில் வாடகை அறை ஒன்றில் 844 நூல்களுடனும் 36 பருவ வெளியீடுகளுடனும், 1934 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சிறியதொரு பொது நூலகம் வசதியின்றி இடர்பட்ட போது அதனை யாழ்ப்பாணப் பட்டின சபை பொறுப்பேற்று 01/01/1935 இல் வாடி வீட்டிற்குத் தெற்கிலுள்ள மேல் மாடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, அங்கே இயங்கி வந்தது.
சகல வசதிகளையும் கொண்ட நவீன பொது நூலகக் கட்டிடம் ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகள் 1952ஆம் ஆண்டு ஆனி மாதம் 14ஆம் திகதி சாம் ஏ. சபாபதி அவர்களின் தலைமையில், நடைபெற்ற ஒரு மாநாட்டினை அடுத்து ஆரம்பிக்கப்பட்டன. புதிய நூலகக் கட்டடத்தை அமைப்பதில் அதி வண பிதா லோங் அவர்கள் மிகுந்த அக்கறை காட்டி வந்தார். அவர்களது முயற்சியின் மூலம் நூலகத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த கலாநிதி எஸ். ஆர். ரங்கநாதன் அவர்களின் ஆதரவும் கிடைத்தது.
நூலகத்தின் அமைப்பிற்கான திட்டங்களை வகுத்துக் கொடுக்க சென்னை அரசின் கட்டடக் கலை நிபுணர் கே. எஸ். நரசிம்மன் அவர்கள் வந்து வரைபடங்களைத் தயாரித்து உதவினார். கட்டிட அடிக்கல்நாட்டு விழா 1953ஆம் ஆண்டு பங்குனி மாதம் 29ஆம் திகதி நடைபெற்றது. திராவிடக் கலயம்சம் பொருந்திய எழில் மிகு அறிவுக் கோயில் ஒன்று வெகு பொது மக்களின் நிறைவான ஆதரவுடன் உருப்பெற ஆரம்பித்தது. பொது நூலகத்தின் முதற்கட்டம் பூர்த்தி செய்யப்பட்டு 11/10/1959இல் அதி விமரிசையாக அப்போது யாழ். முதல்வராக இருந்த முதல்வர் அ.த.துரையப்பா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நூலகத்தின் ஏனைய கட்டடங்களும் பூர்த்தி செய்யப்பட்டன. பூரணத்துவம் பெற்று இயங்கி வந்த இந்நூலகத்தில் நூலகர் உட்பட 33 பேர் கடமையாற்றி வந்தார்கள்.
பொது நூலகம் எரிப்பு
யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் வன்முறைக் குழுவொன்றால் இடம்பெற்றது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. இவ்வழிப்பு நேர்ந்த காலக்கட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது.
நமது சொந்த பகையை பல வழிகளில் தீர்க்கலாம். அதில் கல்விக்கு அநியாயம் செய்து தீர்ப்பது மிகவும் பிழையான விடயம் ஏனெனில் நீங்கள் கல்விக்கு ஏதும் அநியாயம் செய்யும் போது அது ஒரு சமூகத்தையே பாதிக்கும். உதாரணமாக இந்த யாழ்ப்பாண நூலக எரிப்பை குறிப்பிடலாம்.
A.M.Amjath